சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதி பெண் பலி

பரமத்தியில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.

Update: 2021-08-20 18:06 GMT
பரமத்திவேலூர்:
கார் மோதல்
பரமத்தி அருகே உள்ள தேவிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராசம்மாள் என்கிற பாப்பாத்தி (வயது 50). இந்த தம்பதியின் மகள் சுதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பரமத்தியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுதா தனது 2 குழந்தைகள், தாய் பாப்பாத்தியுடன் தேவிபாளையத்தில் இருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார். 
வழியில் பரமத்தி ஊருக்குள் செல்ல மரவாபாளையம் பிரிவில் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சாலையோரம் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது மற்றொரு கார் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சுதாவின் மொபட் மீது மோதியது.
பெண் பலி
இந்த விபத்தில் பாப்பாத்தி தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். சுதா மற்றும் அவருடைய 2 குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் பாப்பாத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பரமத்தி அருகே  மொபட் மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்