உத்தனப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

உத்தனப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-22 16:51 GMT
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி 
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் அப்பண்ணா. இவருடைய மகன் சுரேஷ் (வயது 41). விவசாயி. இவருக்கு திருமணமாகி நிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 
சுரேஷ் நேற்று முன்தினம் இரவு தனது மாமனார் கோவிந்தப்பா (65) என்பவரின் விவசாய நிலத்தில் காட்டு விலங்குகள் எதுவும் வருகிறதா? என பார்ப்பதற்காக சென்றார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த முருகேஷ் (25) என்பவரும் உடன் சென்றார். 
மின்சாரம் தாக்கி பலி
அங்கு முருகேசனை ஒரு இடத்தில் அமர சொல்லி விட்டு சுரேஷ் நிலத்தை சுற்றி பார்க்க சென்றார். அப்போது கோவிந்தன் என்பவரின் நிலத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி அவர் மின்சாரம் தாக்கி பலியானார்.  
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரேசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். தகவலின்பேரில் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் காட்டுப்பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சுரேஷ் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்