அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

காரியாபட்டியில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-22 19:40 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டியில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
சக்தி மாரியம்மன் 
காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரில்  ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக  ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன், ராஜா ஆகியோர் இருந்து வருகின்றனர். 
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜைகள் முடித்த ஹரிஹரசுப்பிரமணியன் கோவில் கதவை பூட்டி விட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை பூசாரி ராஜா கோவில் முன்பக்க கதவை திறந்து கருவறை முன்பு உள்ள கிரில் கேட்டை திறக்க முற்பட்ட போது, பூட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கருவறை முன்பு இருந்த இரும்பு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. 
இறந்து கிடந்த பூனை 
கோவில் பிரகாரத்தின் மேற்கு பக்கம் உள்ள பொருட்கள் வைப்பறையில் இருந்த கோவில் பூனை இறந்து கிடந்துள்ளது. 
இதுகுறித்து பூசாரி ராஜா காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்