கலசபாக்கம் அருகே; போலி டாக்டர் கைது
கலசபாக்கம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் போலி டாக்டர் தப்பி ஓடிவிட்டார்.
கலசபாக்கம்
கலசபாக்கத்தை அடுத்த கோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 50). பி.ஏ.பட்டதாரியான இவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் அதே பகுதியில் அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் மருத்துவத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் வீட்டில் சிகிச்சைக்காக மருந்துகள் வைத்திருந்ததை பறிமுதல் செய்து, சங்கரை கலசபாக்கம் போலீஸ் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கலசபாக்கம் போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் போலி டாக்டர் ஓட்டம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் கண்ணகி தலைமையிலான மருத்துவ குழுவினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மெடிக்கல் கடையை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது.
முன்னதாக அதிகாரிகள் வருவதை அறிந்த அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அங்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மருத்துவக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.