அகதிகள் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு

இலங்கை அகதிகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-08-27 14:41 GMT

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள், ஊராட்சி தலைவர் மணிமாறன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பூசாரிபட்டியில் இருக்கும் அரசு நிலத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மேலும் அதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை வழங்கினர். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், பூசாரிபட்டியில் 400 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் ஆடு-மாடுகளை வளர்த்து வருகிறோம். எனவே அங்குள்ள அரசு நிலத்தை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகிறோம். விவசாயத்தோடு, கால்நடைகள் வளர்ப்பும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த நிலையில் அரசு நிலத்தில் இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைக்க இருப்பதாக தெரியவருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகதிகள் முகாம் அமைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும். மேலும் அந்த நிலத்தை பூசாரிபட்டி மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்