திருமணமான சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

திருமணமான சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-27 20:34 GMT
கீழப்பழுவூர்:

திருமணமான சிறுமி கடத்தல்
திருச்சி மாவட்டம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்த மதியழகனின் மகன் மணிகண்டன்(வயது 22). சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கும், அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் மணிகண்டன் கோயம்புத்தூரில் தங்கி வேலை செய்து வந்தார். இதனால் அந்த சிறுமி தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே திருமணத்திற்கு முன்பே அந்த சிறுமியை நாகப்பட்டினம் மாவட்டம் கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த ராமனின் மகன் வெற்றிச்செல்வன்(20) காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டில் இருந்த அந்த சிறுமியை, வெற்றிச்செல்வன் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
கணவர்- வாலிபர் கைது
இதுகுறித்து சிறுமியின் தாய், கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற வெற்றிச்செல்வனை போலீசார் பிடித்து, சிறுமியை மீட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை கடத்திய வெற்றிச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழும், அந்த சிறுமியை திருமணம் செய்த மணிகண்டன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
தாய் மீதும் வழக்கு
மேலும் திருமணத்திற்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமியை அரியலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியை கடத்திய வாலிபர் மற்றும் திருமணம் செய்த கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்