முடிதிருத்தும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விளாத்திகுளம் அருகே முடிதிருத்தும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-28 17:25 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா (வயது 70). முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாரியம்மாள் (65). இவர் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்று உள்ளார். மூக்கையாவுக்கு சரிவர வேலை இல்லாததால், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் வரை வீடு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து, கதவை திறந்து பார்த்துள்ளனர். இதில் 2 பேரும் விஷம் குடித்ததும், இதில் மூக்கையா இறந்து கிடந்ததும் தெரியவந்தது. உயிருக்கு போராடிய மாரியம்மாளை மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்