மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; முதியவர் பலி

குளித்தலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பேரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Update: 2021-08-28 18:31 GMT
குளித்தலை,
பாராட்டு விழா
குளித்தலை அருகே உள்ள காக்கையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 30). இவர் வேலை செய்யும் தனியாா் நிறுவனம் சார்பில் இவருக்கு பாராட்டு விழா திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அவருடன் அவரது தந்தை நல்லதம்பி மற்றும் அக்காள் மகன் தர்மர் (18) மற்றும் உறவினர்கள் சென்றுள்ளனர்.
விழா முடிந்ததும் தர்மர், தனது தாத்தாவான நல்ல தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் முசிறியில் இருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தார். முசிறி-குளித்தலை தந்தை பெரியார் காவிரி பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பாலத்தின் எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
முதியவர் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தர்மரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற தர்மர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்