ஆம்பூர் அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல். 2 பேர் கைது
கார்களில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
ஆம்பூர்
ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துச் சென்றனர். ஆம்பூரை அடுத்த ெசங்கிலிகுப்பம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த 2 கார்களுக்கு அருகில் போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் காரில் இருந்து கீழே இறங்கி தப்பியோடினர். சந்தேகமடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
போலீசார், கார்களில் சோதனைச் செய்தபோது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா பாக்குகள், ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
பிடிபட்ட இருவரும் சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சித்திக் (வயது 31), கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தைச் சேர்ந்த முத்துராஜ் (33) என்றும், பெங்களூருவில் இருந்து தங்களது சொந்த காரில் சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறினர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 32 மூட்டை குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.