வீட்டின் மீது பாய்ந்த கார்

பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் மீது கார் பாய்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-29 17:42 GMT
பரங்கிப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மகேஷ் (வயது 40). விபத்தில் சிக்கிய இவருடைய உறவினர் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மகேஷ், பரங்கிப்பேட்டை அகரம் பகுதியை சேர்ந்த அறிவழகன் (40), சாந்தி (55), கஜம் மூர்த்தி (21), கார்த்திக் (25), சதீஷ் (23), சிவக்குமார் (26) ஆகிய 7 பேரும்  காரில் புதுச்சேரி புறப்பட்டனர்.
 காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் பகுதியில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது. மேலும் அந்த கார் மரத்தில் மோதிய வேகத்தில் திரைப்பட சண்டைக்காட்சியின் போது கார் பறப்பது போல், மகேஷ் ஓட்டிச்சென்ற கார் பறந்து சென்று அருகில் இருந்த ஒரு வீட்டின் மீதுபாய்ந்து தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
 இந்த விபத்தில் மகேஷ் உள்பட 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் மகேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்