திருட வந்த வீட்டில் போதையில் உறங்கிய கொள்ளையன்; தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், வீட்டின் கதவை மூடி விட்டு அறைக்குள் தூங்க சென்றார். அதிகாலை எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்த தனது செல்போன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தநிலையில் அவர், செல்போனை தேடிய நிலையில் வீட்டின் பழைய பொருட்களை போட்டு வைக்கும் ஒரு அறையில் மதுபோதையில் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது கையில் மாயமான செல்போனை அந்த நபர் வைத்திருந்ததால் திடுக்கிட்டார். உடனே அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து வந்து தூங்கி கொண்டிருந்த அந்த நபரை எழுப்பி தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் போலீசில் ஒப்படைந்ததையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அம்பத்தூரை சேர்ந்த ரிச்சர்ட் (40) என்பதும், திருடுவதற்காக இரவில் நைசாக உள்ளே புகுந்த அவர், மதுபோதையில் உறங்கிய நிலையில், பிடிபட்டதையும் கூறினார். இதையடுத்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.