கடத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற சிறுமி ஏரியில் மூழ்கி பலி

கடத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற சிறுமி ஏரியில் மூழ்கி பலியானாள்.

Update: 2021-08-31 16:41 GMT
கடத்தூர்,

கடத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற சிறுமி ஏரியில் மூழ்கி பலியானாள்.

சிறுமி பலி

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி பொந்துக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகள்கள் அனிஷாஸ்ரீ (வயது 7), ரித்திகாஸ்ரீ (6). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாடு மேய்ப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றனர். அப்போது அக்காள், தங்கைகள் 2 பேரும் ஏரி தண்ணீரில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக ரித்திகாஸ்ரீ தண்ணீரில் மூழ்கினாள். 
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிஷாஸ்ரீ சத்தம் போட்டாள். அவளுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுமி ஏரியில் மூழ்கி இறந்து விட்டாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரித்திகாஸ்ரீயின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். 

போலீசார் விசாரணை

ஏரியில் மூழ்கி சிறுமி இறந்தது குறித்து தாளநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்