கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

Update: 2021-08-31 17:39 GMT
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும், பிரையண்ட் பூங்காவை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனிடையே இன்று (புதன்கிழமை) காலை முதல் வனப்பகுதியில் உள்ள குணாகுகை, பைன்மரக்காடுகள், மோயர்பாயிண்ட் மற்றும் தூண்பாறை ஆகிய 4 சுற்றுலா இடங்களை திறப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனைவரும் முககவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் சுற்றி பார்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்லவும், மன்னவனூர் பகுதியில் உள்ள சூழல் மையத்தை பார்வையிடவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்