திருப்பூரில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளி வகுப்பறைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

திருப்பூரில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளி வகுப்பறைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

Update: 2021-09-01 16:40 GMT
திருப்பூர், 
திருப்பூரில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளி வகுப்பறைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 
கனமழை
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மதியம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை லேசான வெயில் இருந்து வந்தது. இதற்கிடையே மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
திடீரென மாலை 5 மணி அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக மாநகரில் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் மழைவெள்ளம் பாய்ந்தோடியது. மாலை நேரம் என்பதால் அலுவலக பணி முடிந்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். 
வெள்ளம் சூழ்ந்தது 
ஏற்கனவே மாநகரில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டிபோடப்பட்ட நிலையில் இந்த மழையின் காரணமாக அந்த சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டன. வாகன ஓட்டிகள் இதனை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 
இதுபோல் ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், புதிய பஸ் நிலையம் அருகே நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சாலைகளில் பாய்ந்தோடியது. மேலும், 60 அடி ரோடு அருகே உள்ள நிறுவனங்கள் சிலவற்றையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. 
பள்ளி வகுப்பறைகளுக்குள்...
இதற்கிடையே நெசவாளர் காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக இந்த பள்ளி வகுப்பறைகளுக்குள் வெள்ளநீர் மற்றும் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீரும் புகுந்தது. 
மேலும், ஆசிரியர்கள் அறைகளிலும் மழைநீர் புகுந்ததால் ஆசிரியர்கள் பலர் அவதியடைந்தனர்.
பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் மழைநின்ற பின்பு ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளியின் முகப்பு கதவை உயர்த்த வேண்டும் என பள்ளி சார்பில் பல முறை புகார் கொடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்