மந்தாரக்குப்பம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை போலீசார் விசாரணை

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-01 17:24 GMT
மந்தாரக்குப்பம், 

வாலிபர் பிணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள், பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, இதுபற்றி மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ. நகர் பகுதியை சேர்ந்த மொட்டை ராஜன் என்பவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (வயது 35) என்பதும், அவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. 

பரபரப்பு

மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அருண்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்