விநாயகர் சதுர்த்தியையொட்டி சாலைபகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி, இறைவனிடம் முறையிடும் போராட்டம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சாலைபகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி, இறைவனிடம் முறையிடும் போராட்டம்

Update: 2021-09-02 16:12 GMT
உடுமலை, 
விநாயகர் சதுர்த்தியையொட்டி சாலைபகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி, இறைவனிடம் முறையிடும் போராட்டம், உடுமலையில் இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி
வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் (சாலைப்பகுதிகள்) விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. 
இந்த நிலையில் சாலைப்பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரி வருகிறது. ஆனால் அரசு அனுமதி வழங்காத நிலையில் அனுமதிகோரி இறைவனிடம் முறையிடும் போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்திருந்தது.
உடுமலை கோவில்கள்
அதன்படி உடுமலை வடக்கு நகர இந்து முன்னணி சார்பில் இறைவனிடம் முறையிடும் போராட்டம் நேற்று  உடுமலையில் மாரியம்மன் கோவில், ஏரிப்பாளையத்தில் உள்ள தங்காத்தாள் கோவில், சிவசக்தி காலனியில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்கள் முன்பு நடந்தது.
இந்த போராட்டத்தில் இந்து முன்னணி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், உடுமலை வடக்கு நகர தலைவர் முருகேசன், துணைத்தலைவர் பொன்.முருகேசன் மற்றும் நவீன், செயற்குழு உறுப்பினர் ரூபேந்திரன்பிரசாத், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போடிப்பட்டி
 மடத்துக்குளம் ராஜகணபதி கோவிலில் இந்து முன்னணியினர் முறையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்