வீடு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலி

எருமப்பட்டி அருகே வீடு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார்.

Update: 2021-09-02 18:12 GMT
எருமப்பட்டி:
கட்டிட மேஸ்திரி
எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி தோட்டக்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பெரியசாமி நேற்று முன்தினம் எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவிலிருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரின் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். 
2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்