விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய பெண் சாவு

திருத்தங்கலில் விளக்கு ஏற்றிய போது ஏற்பட்ட விபத்தில் தீயில் கருகிய பெண் பலியானார்.

Update: 2021-09-03 20:00 GMT
சிவகாசி,

திருத்தங்கலில் விளக்கு ஏற்றிய போது ஏற்பட்ட விபத்தில் தீயில் கருகிய பெண் பலியானார்.
தகராறு
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 62). இவரது மகள் ராசாத்தி (22) என்பவருக்கும் திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்தின் போது ராசாத்திக்கு கொடுக்கப்பட்ட நகைகளை மணிகண்டன் அடகு வைத்து வீடு ஒத்திக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய நகையை திருப்பி தரும்படி இளம்பெண் ராசாத்தி, தனது கணவர் மணிகண்டனிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ராசாத்தி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது பெற்றோர் சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
தீயில் கருகி பெண் பலி
 இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் விளக்கு போடும்போது ஏற்பட்ட தீ விபத்தில் ராசாத்தி தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
 இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்