தேனி மாவட்டத்தில் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருது

தேனி மாவட்டத்தில் சிறந்த 15 கலைஞர்களுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.

Update: 2021-09-04 16:53 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, 15 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலைவளர்மணி, கலை சுடர்மணி, கலைநன்மணி, கலைமுதுமணி ஆகிய பெயர்களில் விருதுகளை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குமான விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன. இந்த விருதுடன் பொற்கிழி, பாராட்டு பத்திரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கியதுடன் கலைஞர்களுக்கு சால்வை அணிவித்தும் கவுரவித்தார். விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் அபியான் திட்டம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தின் போது, ஊட்டச்சத்து பிரசாரம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்