விபத்தில் சிறுமி உயிரிழப்பு: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஜப்தி

Update: 2021-09-06 16:50 GMT
செஞ்சி, 
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கோட்டப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் மகள் பாரதி (வயது 12). இவள் கடந்த 28.4.2013 அன்று கோட்டப்பூண்டி கூட்டு சாலையில் நடந்து சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து சேத்பட் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தாள். 
இதுகுறித்து பாரதியின் தாய் மீனா கொடுத்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்தில் மகளை இழந்த மீனா வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் இழப்பீடு கேட்டு செஞ்சி சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த 25.4.2019 அன்றுக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ 4 லட்சத்து 60 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். ஆனால் உரிய காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து மீனா நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நளினகுமார் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 61 ஆயிரத்து 824-ஐ வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டார். அதன் பேரில் செஞ்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை முதல் நிலை கட்டளை நிறைவேற்றுனர் மீரா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்