ஜெகதாப்பட்டினம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதியதில் பெண் பலி 2 பேர் காயம்

ஜெகதாப்பட்டினம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதியதில் பெண் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-09-06 19:05 GMT
கோட்டைப்பட்டினம்:
ஷேர் ஆட்டோ
ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள கோடக்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார்  மனைவி ரேவதி (வயது 36). இவர் மீமிசல் பகுதிக்கு சென்றுவிட்டு பின்பு அங்கிருந்து ஊருக்கு ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி வந்து கொண்டிருந்தார். ஷேர் ஆட்டோவில் இவருடன் சேர்த்து 5 பேர் பயணித்துள்ளனர். ஷேர் ஆட்டோவை மீமிசல் பகுதியை அடுத்துள்ள கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவர் ஓட்டினார்.
பெண் பலி
பாலகுடி அருகே ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னே சென்ற வாகனத்தின் டிரைவர் திடீரென பிரேக் அடித்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர் நிலைதடுமாறி வலது புறமாக ஷேர் ஆட்டோவை திருப்பியுள்ளார். அப்போது ஷேர் ஆட்டோக்கு பின்புறம் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ரேவதி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
போலீசார் விசாரணை 
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீசார் ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள கீழ மஞ்சக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கருப்பையா (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்