விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது

Update: 2021-09-09 11:52 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் வகையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு ஆர்வத்துடன் சிலைகளை வாங்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விநாயகர் சிலை விஜயர்சனம் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், அதனை ஊர்வலமாக எடுத்துசென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, தனிநபராக சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் ஆர்வம்
இதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் வகையில் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகளை அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்