லால்பேட்டையில் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

லால்பேட்டையில் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகயது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-09 19:32 GMT

காட்டுமுன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் நேற்று நகர அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், லால்பேட்டை நகர அ.தி.மு.க. நிர்வாகிகளை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் உரியமுறையில் அழைப்பதில்லை. இது தொடர்பாக கட்சி தலைமையிடத்தில் தெரிவித்தும் அவர்களும் மேல்நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அ.தி.மு.க.வில் இருந்து விலகுவது என்று ஆலோசித்தனர். 

இதுபற்றி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தரப்பில் கூறுகையில், நகர செயலாளர் சபியுல்லா தலைமையில் லால்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சுமார் 500 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவது என்று முடிவு செய்து இருக்கிறோம். 

மேலும், அனைவரும் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்போம் என்று தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகளின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கூட்டத்தில் நிர்வாகிகள் ராமலிங்கம், குணசேகரன், ஹாஜா, ஜாக்கீர், பஜ்ஜிலுதீன், ரகமத்துல்லா, உசேன், பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்