கடையில் செல்போன்கள்-மடிக்கணினி, பணம் திருட்டு

கடையில் செல்போன்கள்-மடிக்கணினி, பணம் திருட்டுபோனது.

Update: 2021-09-09 20:14 GMT
வரதராஜன்பேட்டை:

செல்போன்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் ஆண்டிமடம் கடைவீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு(ஷட்டர்) திறக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 7 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் கல்லாவில் இருந்த ரூ.22 ஆயிரத்து 500 ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து அவா் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தாா். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அது இயங்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
கடன் வாங்கி...
திருட்டு குறித்து மனோகரன் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்று அதன்மூலம் புதிய செல்போன்களை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்ததாகவும், ஏற்கனவே ஒருவரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக வைத்திருந்த ரூ.22,500-ம் திருட்டு போய்விட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஆண்டிமடம் காடுவெட்டி சாலையில் உள்ள 2 கடைகளில் மர்ம நபர்கள் பணம், சைக்கிளை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது செல்போன் கடையில் மர்ம நபர்கள் கைவரியை காட்டியுள்ளனர். இதனால் கடை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்