வீராம்பட்டினத்தில் முன்விரோத தகராறில் கல்லால் தாக்கியதில் மீனவருக்கு தலையில் பலத்த காயம்

வீராம்பட்டினத்தில் முன்விரோத தகராறில் மீனவர் கல்லால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-09-10 20:35 GMT
அரியாங்குப்பம், செப்.11- 
வீராம்பட்டினத்தில் முன்விரோத தகராறில் மீனவர் கல்லால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாய் தகராறு
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ஜீவரத்தினம் வீதியை சேர்ந்தவர் வினோத் (எ) செல்வகுமார் (வயது 35). திருமணமாகாத இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இரு தரப்பினரும் பலமுறை ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
 இந்தநிலையில் நேற்று பிற் பகல் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகே வினோத் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் வினோத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். 
கல்லால் தாக்கினர்
இதனால் ஆத்திரமடைந்து ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். இதில் பலத்த அடி விழுந்த வினோத் மயங்கிக் கீழே விழுந்தார். 
அதன்பிறகும் ஆத்திரம் தீராத அந்த நபர்கள் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து வினோத் தலையில் பலமுறை தாக்கினர். இதில் ரத்தம் பீறிட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் பயந்து போன அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 
ஆபத்தான நிலையில் சிகிச்சை
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 
அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வினோத்தை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வினோத்துக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வினோத்தை தாக்கியவர்களை போலீசார் வலைவீசி தேடி    வருகின்றனர். முன் விரோத தகராறில் மீனவர் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவத்தால் வீராம்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
____

மேலும் செய்திகள்