பெண் கொலை வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது

பெண் கொலை வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-10 20:43 GMT
 உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் அருகே உள்ள கோம்பையில் கடந்த வாரம் குடும்பத்தகராறு காரணமாக புஷ்பவள்ளி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அறிவுறுத்தலின்பேரில், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேடப்பட்டு வந்தனர்.
 இந்தநிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று பச்சபெருமாள்பட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த மனைவியை கொலை செய்த பெரியசாமி (வயது 32), கொலைக்கு உடந்தையாக இருந்த பெரியசாமியின் தாய் செல்லம்மாள்(63), உறவினர் போஜன் (78) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கோவையில் கட்டிட வேலை செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பெரியசாமி, அவரை கோம்பைக்கு அழைத்து வந்தார். பின்னர், சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த பலகையை எடுத்து புஷ்பவள்ளியின் தலையில் பெரியசாமி அடித்தும், தலையணையால் முகத்தில் அமுக்கியும் கொலை செய்ததும், இதற்கு பெரியசாமியின் தாய் செல்லம்மாள், உறவினர் போஜன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததும் தரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்