திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்கூட்டர் மீது மினிபஸ் மோதிய விபத்தில் தாய் கண் முன்னே சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்கூட்டர் மீது மினிபஸ் மோதிய விபத்தில் தாய் கண் முன்னே சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2021-09-11 16:01 GMT
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்கூட்டர் மீது மினிபஸ் மோதிய விபத்தில் தாய் கண் முன்னே சிறுமி பரிதாபமாக இறந்தாள். தாயும் படுகாயம் அடைந்தார்.
சிறுமி
திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தீபா (30). இவர்களது மகள் தக்சனா (4½). நேற்று மதியம் தீபா தனது மகள் தக்சனாவுடன் பூம்புகார் நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
வீரபாண்டி பிரிவில் இருந்து திருப்பூர் பூம்புகார் நகர் வருவதற்காக பல்லடம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். கலெக்டர் அலுவலகத்தை கடந்து ஒரு பேக்கரிக்கு முன்பு வந்தபோது, எதிர்பாராத விதமாக வீரபாண்டியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்ற மினி பஸ் இவரது ஸ்கூட்டரில் மோதியது. இதில் தீபாவும், தக்சனாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிறுமி தக்சனா பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். தீபா காயத்துடன் உயிர் தப்பினார்.
தாய் கண் முன் சம்பவம்
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீபாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பார்த்து அவளது தந்தை கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவரான தாராபுரத்தை சேர்ந்த அர்ஜூன் (62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண் முன்னே சிறுமி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்