மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
மாமனாரை தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டியங்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 64). இவர் சத்துணவு அமைப்பாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கடைசி மகளுக்கு திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் 3வது மகள் சிவசங்கரிக்கு மட்டும் பன்னீர்செல்வம் தனது செலவில் வீடு கட்டி கொடுத்ததாகவும், மேல்மாடியில் செலவு செய்து மகளே தானாக கட்டி கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் 3-வது மகளின் கணவர் இளங்கோவன், சிவசங்கரியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பன்னீர்செல்வம் மருமகனை தட்டி கேட்டுள்ளார். அப்போது மருமகன் இளங்கோவன், பன்னீர்செல்வத்தை இரும்பு கம்பியால் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பன்னீர்செல்வம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, புதுக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.