மனைவி கத்தியால் குத்திக் கொலை; வாலிபர் கைது

சித்ரதுர்காவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-11 21:45 GMT
சிக்கமகளூரு: சித்ரதுர்காவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நடத்தையில் சந்தேகம்

சித்ரதுர்கா டவுன் பெரிய மசூதி பகுதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா (வயது 35). இவருடைய மனைவி அமீனா (30). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அமீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மெகபூப் பாஷா கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மெகபூப் பாஷா, தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் திரும்பி மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

கொலை

அப்போதும் அமீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மெகபூப் பாஷா திட்டியதாக தெரிகிறது. இதன்காரணமாக மோட்டார் சைக்கிளில் வரும்போதே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மெகபூப் பாஷா, மோட்டார் சைக்கிளை பாதியில் நிறுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமீனாவை சரமாரியாக குத்தி உள்ளார். 

இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த அமீனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மெகபூப் பாஷா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

கணவர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா படாவனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான அமீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை மெகபூப் பாஷா கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சித்ரதுர்கா படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மெகபூப் பாஷாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்