நடுக்கடலில் படகு கவிழ்ந்தது; 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றொரு மீனவர் மாயமாகி உள்ளார். அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை.

Update: 2021-09-11 21:45 GMT
மங்களூரு: அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றொரு மீனவர் மாயமாகி உள்ளார். அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை. 

கடலில் படகு கவிழ்ந்தது

மங்களூரு பனம்பூர் பகுதியில் இருந்து கசபா பைங்கெரே பகுதியை சேர்ந்த அஜித், இம்தியாஸ், பைரோஸ், செரீப், சினான் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க படகில் அரபிக்கடலுக்கு ெசன்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், கடலில் படகு கவிழ்ந்தது. 

இதனால் அவர்கள் 5 பேரும் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

4 மீனவர்கள் மீட்பு

பின்னர் அவர்கள், கடலில் மூழ்கி தத்தளித்த மீனவர்களை மீட்க முயற்சி செய்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி 4 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மற்றொரு மீனவரை அவர்களால் மீட்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. நீண்ட நேரமாக அவரை அந்தப்பகுதியில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மீட்கப்பட்ட 4 மீனவர்களுடன் அவர்கள் கரைக்கு வந்தனர். இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். 

கடலோர காவல் படையினர் மாயமான மீனவரை தேடி வருகிறார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. மாயமான மீனவா் செரீப் என்பது தெரியவந்தது. அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை. மாயமான மீனவரை கடலோர காவல் படையினர், மீனவர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்