காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2021-09-11 21:46 GMT
தாவணகெரே: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

காங்கிரஸ் பிரமுகர் கொலை

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா பசவபட்டணா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஜெய்னுல்லாகான் (வயது 43). இவர் மாயகொண்டா தொகுதி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணை தலைவராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெய்னுல்லாகான் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜெய்னுல்லாகானை யாரோ கடத்தி சென்று விட்டதாக அவரது குடும்பத்தினர் பசவபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பசவபட்டணாவில் உள்ள வனப்பகுதியில் ஜெய்னுல்லாகான் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெய்னுல்லாகானை யாரோ கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது.

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால்....

இந்த நிலையில் ஜெய்னுல்லாகானை கொலை செய்ததாக அம்ஜத்கான் (வயது 44), அவரது சகோதரர் இஸ்மாயில்கான் (42), அம்ஜத்கானின் நண்பர் நூர்அகமது (36) ஆகியோரை பசவபட்டணா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அம்ஜத்கானின் மனைவிக்கும், ஜெய்னுல்லாகானுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்து உள்ளது.

அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்த அம்ஜத்கான் கள்ளக்காதலை கைவிடும்படி ஜெய்னுல்லாகானிடம் கூறியுள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அம்ஜத்கான், தனது சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து ஜெய்னுல்லாகானை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

மேலும் செய்திகள்