மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-09-11 21:52 GMT
துவரங்குறிச்சி:

கார் மோதியது
சிவகங்கை மாவட்டம், வலசைப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). இவரும், திருமலைக்குடியைச் சேர்ந்த வெள்ளையன்(27) என்பவரும் நேற்று திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கல்லுப்பட்டியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணனும், வெள்ளையனும் படுகாயமடைந்தனர்.
2 பேர் சாவு
அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த வெள்ளையனை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்