கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை சுட்டிக்காட்டி மணமக்களுக்கு மண் அடுப்பை பரிசாக வழங்கிய நர்சுகள்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை சுட்டிக்காட்டி சக நர்சுகள், மணமக்களுக்கு திருமண பரிசாக மண் அடுப்பை வழங்கினர்.

Update: 2021-09-11 22:52 GMT
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுபவர் அதுல்யா. இவருக்கும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்த அதுல்யாவுடன் பணியாற்றும் சக நர்சுகள், மணமக்களுக்கு திருமண பரிசாக மண் அடுப்பை வழங்கினர். நூதன முறையில் மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு வழங்கப்பட்டதால் திருமண மண்டபம் கலகலப்பாக காணப்பட்டது.

“வரலாறு காணாத அளவுக்கு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக மணமக்களுக்கு மண் அடுப்பை பரிசாக வழங்கியதாக” நர்சுகள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்