பெண்ணின் வீடு புகுந்து மகனின் கழுத்தில் கத்தியை வைத்து சீட்டு பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்

பெண்ணின் வீடு புகுந்து மகனின் கழுத்தில் கத்தியை வைத்து சீட்டு பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்.

Update: 2021-09-12 08:44 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவர், சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் நெல்லையைச் சேர்ந்த கார் டிரைவர் கணேசன்(30) என்பவர் சீட்டு பணம் கட்டி வந்தார். அதில் கணேசனுக்கு ராஜேஸ்வரி ரூ.1 லட்சம் தரவேண்டும் என தெரிகிறது.

இதனால் கணேசன் குடிபோதையில் ராஜேஸ்வரியின் வீட்டுக்குள் புகுந்து கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் அங்கிருந்த சிறிய கத்தியை எடுத்து ராஜேஸ்வரின் 15 வயது மகள் மற்றும் 8 வயது மகனை பிடித்து வைத்துக்கொண்டார்.

மகளை கையால் தாக்கிய கணேசன், மகனின் கழுத்தில் கத்தியை வைத்து சீட்டு பணம் கேட்டு மிரட்டினார். இதில் ராஜேஸ்வரின் மகனுக்கு கீறல் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கணேசனை கைது செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கணேசனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் ராஜேஸ்வரியின் மகன், மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். கீறல் காயம் அடைந்த சிறுவன், எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். பொதுமக்கள் தாக்கியதில், கணேசனுக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்