விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-09-12 23:12 GMT
பூந்தமல்லி, 

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கவுதம் (வயது 11). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை போரூரை அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள தன்னுடைய மாமா ரவி என்பவரது வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

நேற்று மாலை கவுதம், தனது உறவினரின் மகனுடன் நூம்பலில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைக்க சென்றார். குளத்தில் விநாயகர் சிலையை கரைத்த பின்னர், அந்த குளத்தில் இருவரும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் மூழ்கி பலியான கவுதம் உடலை மீட்டனர். மதுரவாயல் போலீசார் கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குன்றத்தூரை அடுத்த சம்பந்தம் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (38). எலெக்ட்ரிசீயனான இவர், நேற்று மாலை தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார்.

மகன்களை ஏரியின் 5-வது மதகின் அருகே நிறுத்திவிட்டு பாரதிராஜா மட்டும் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்கும் போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் விழுந்து விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன்கள் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பாரதிராஜாவை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் பாரதிராஜா ஏரியில் மூழ்கினார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய பாரதிராஜாவை பிணமாக மீட்டனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்