தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்

தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-13 11:04 GMT
சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைபள்ளம், வெங்கட்ராமன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவருடைய மனைவி பெயர் சுமதி. இவர்களது மகன் பிரகாஷ் (20). போதைப்பழக்கத்துக்கு அடிமையான பிரகாஷ், தினமும் வீட்டில் வந்து தகராறு செய்தார். இதனால் கோபம் கொண்ட செல்வம், மகன் பிரகாசை வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழும்படி உத்தரவு போட்டார். பிரகாசும் அதே பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது தாயார் சுமதியை பார்க்க பிரகாஷ் வீட்டுக்கு சென்றார். அதற்கும் செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தந்தை-மகன் இடையே மோதல் ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

மோதல் முற்றி பின்னர் சண்டையானது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், தனது தந்தை என்றும் பாராமல் செல்வத்தை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த செல்வம், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். தந்தையை கொன்றதாக தாயார் சுமதி கொடுத்த புகாரில் மகன் பிரகாசை எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கைது செய்தனர். பிரகாஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்