குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு

குளித்தலை அருகே குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-13 18:09 GMT
 குளித்தலை,
குடும்பத்தகராறு
குளித்தலை அருகே உள்ள பெரியமலையாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி‌. இவரது மனைவி மாரியாயி (வயது 44). இவர்களது மகளான கலைமணிக்கும்(35), அதே பகுதியை சேர்ந்த, உறவினரான கிருஷ்ணமூர்த்திக்கும் (38) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமுருகன் (8) என்ற மகன் உள்ளான்.இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கலைமணி தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். 
அரிவாள் வெட்டு
சம்பவத்தன்று கலைமணி வீட்டிற்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் தகராறு செய்து அவர் அணிந்திருந்த தாலியை அறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலைமணியின் அண்ணன் சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தியிடம் செல்போனில் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களான பழனியாண்டி, பொன்னுசாமி, காமாட்சி ஆகியோர் கலைமணியின் வீட்டிற்கு சென்று மாரியாயி மற்றும் அவரது மகன் வசந்தகுமார் (17) ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மிளகாய் பொடியை தூவி, அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
4 பேர் மீது வழக்கு
இதில்காயமடைந்த மாரியாயி, வசந்தகுமார் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாரியாயி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 4 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறில் மாமியார் மற்றும் மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்