பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்றபோது பரிதாபம் புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி

புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி

Update: 2021-09-13 19:25 GMT
வேலூர்

வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள சலமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 17).அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வெங்கடேசனுக்கு பிறந்தநாள்.
 இதனால் அன்று இரவு 8.30 மணிக்கு அவரது நண்பர்கள் இருவருடன் கண்ணமங்கலத்திற்கு சென்று கேக் வாங்கினர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் மீண்டும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டி வந்தார். வேலூர் மெயின் ரோட்டில் பெருமாள்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் வந்த அவரது நண்பர் 2 பேரும் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் கேக் வாங்க சென்ற மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்