சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதனுக்கு குற்றப்பத்திரிகை நகல்

சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதனுக்கு குற்றப்பத்திரிகை நகல்.

Update: 2021-09-14 09:38 GMT
ஆலந்தூர்,

‘பப்ஜி’ உள்பட ஆன்-லைன் விளையாட்டுகள் குறித்து ‘யூ டியூப்’பில் பெண்கள் உள்பட பலரிடம் ஆபாசமாக பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘பப்ஜி’ மதனை கைது செய்தனர். அவரது மனைவியும் கைதாகி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் கடந்த மாதம் பப்ஜி மதன் மீது ஆவணங்கள் உள்பட சுமார் 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 32 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அரசு தரப்பு வக்கீல் விமலா குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ‘பப்ஜி’ மதனை நேற்று போலீசார் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது மனைவி கிருத்திகாவும் ஆஜராகி இருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரான மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கு மீதான விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்