பழனியில் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் சாமி தரிசனம்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் பழனியில் உள்ள நாக காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-09-14 16:04 GMT
பழனி:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து தமிழகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்தநிலையில் மாரியப்பன் நேற்று பழனிக்கு வருகை தந்தார். அப்போது அவர், அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாக காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, அவர் அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். 
இதற்கிடையே மாரியப்பன் பழனி வந்தது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாரியப்பன் அங்கிருந்து சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

மேலும் செய்திகள்