ஆத்தூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு- விருந்துக்கு வந்த இடத்தில் பரிதாபம்

ஆத்தூர் அருகே விருந்துக்கு வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.

Update: 2021-09-15 15:55 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே விருந்துக்கு வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 சிறுவன்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே சுண்டங்கிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளியான இவருடைய மகன் மவுனிஷ் (வயது 11). அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மவுனிஷ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூரில் உள்ள தாய்மாமா வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருந்தான்.
நேற்று முன்தினம் விளையாட சென்ற மவுனிஷ் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்ற விவரமும் தெரியவில்லை. பல இடங்களில் தேடும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நீரில் மூழ்கி சாவு
இதற்கிடையே துலுக்கனூர் ஏரியில் சிறுவன் உடல் ஒன்று மிதப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் விரைந்து வந்தனர். தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். ஏரியில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏரியில் பிணமாக மிதந்தது மவுனிஷ் என்பதும், ஏரியில் இறங்கி குளித்த போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. உடனே சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விருந்துக்கு வந்த இடத்தில் சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்