சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கொச்சி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசிய தகவல் அளித்தனர்.

Update: 2021-09-16 10:11 GMT
இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா். அப்போது துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக வந்த கேரளாவை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை. பின்னர் பெண் அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்