திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் தகராறு சண்டையை விலக்க முயன்ற பெண் அடித்துக் கொலை

திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற பெண்ணை அடித்து கொன்றது தொடர்பாக கணவன் மனைவி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-09-16 17:59 GMT


திருக்கோவிலூர்

குடிபோதையில் தகராறு

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(வயது 50). செங்கல் சூளை தொழிலாளியான இவர் நேற்று அதே ஊரை சேர்ந்த மாணிக்கம்(50), ரங்கநாதன் மற்றும் குட்டி என்கிற தனசேகர் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மாணிக்கத்துக்கும், நாராயணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம், இவரது மனைவி பூங்காவனம்(45), மகன் மணிகண்டன்(20), முருகன் மகன் அஞ்சாமணி(20), முனுசாமி மகன் முருகன்(60), இவரது மனைவி அஞ்சலை(50) ஆகிய 6 பேரும் நாராயணன் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தனர். இதை பார்த்த நாராயணனின் மனைவி லட்சுமி (35) ஓடிசென்று சண்டையை விலக்கிவிட்டு அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

அடித்து கொலை

அப்போது ஆத்திரம் அடைந்த மாணிக்கம் தரப்பினர் லட்சுமியை திட்டி தாக்கி கீழே பிடித்து தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மாணிக்கம் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட  லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

6 பேர் கைது

இதுகுறித்து லட்சுமியின் கணவர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில்  மணிகண்டன், அஞ்சாமணி, மாணிக்கம், முருகன், அஞ்சலை மற்றும் பூங்காவனம் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
குடிபோதையில் ஏற்ப்பட்ட சண்டையை விலக்க முயன்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்