வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் கைது

அரவக்குறிச்சி அருகே இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-16 18:36 GMT
அரவக்குறிச்சி, 
வாலிபர் கொலை
அரவக்குறிச்சி அருகே சூரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 24). இவர் பள்ளப்பட்டி அருகே பூமதேவத்தை சேர்ந்த பெருமாள்சாமி (54) என்பவருடைய எண்டர்பிரைசஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 15-ந் தேதி இரவு பெருமாள் சாமியும், கடையில் வேலை பார்க்கும் ரமேசும் கடையை பூட்டிவிட்டு தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பூமதேவம் என்ற கிராமம் வந்ததும் பெருமாள்சாமி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுவிட்டார். அங்கிருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் ரமேஷ் வீடு உள்ளது. இந்தநிலையில் பூமதேவத்திலிருந்து செல்லும் வழியில் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே ரமேஷை வழிமறித்த மர்ம ஆசாமிகள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் அரவக்குறிச்சி துணை சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் மேற்பார்வையில் அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (31), ராபர்ட் (22), தும்பலப்பட்டியை சேர்ந்த அழகுசரவணன் (27), இதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய 4 பேரை அரவக்குறிச்சி அருகே கணவாய் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை வழக்கில்  தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்