வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சுழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-09-17 19:33 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். 
பீரோ உடைப்பு 
திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 47). இவருக்கு திருமணம் முடிந்து இவரது கணவருடன் மதுரை அருகே உள்ள பூவந்தி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருவதாகவும், மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமம் தும்மசின்னம்பட்டிக்கு வந்து விட்டு பின்னர் பூவந்திக்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மாரியம்மாளின் அக்கா பஞ்சவர்ணம் போன் செய்து உன் வீடு திறந்து கிடப்பதாகவும், பீரோ உடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். 
நகை - பணம் திருட்டு 
இதையடுத்து மரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. பின்னர் வீட்டில் இருந்த ரூ.5000 மதிப்புள்ள 3 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தோடு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
அதேபோல மாரியம்மாள் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துராஜ் மனைவி திருமேனி செல்வி வீட்டில் ரூ. 5 ஆயிரம், தர்மர் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  இந்த சம்பவம் குறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்