கல்குவாரி அரவை எந்திரத்தில் சிக்கி மூதாட்டி பலி
கல்குவாரி அரவை எந்திரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா க.விலக்கு அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 60). இவர் க.விலக்கு அருகே கருப்பத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பிச்சையம்மாள் வேலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள கன்வேயர்பெல்ட்டில் திடீரென பிச்சையம்மாளின் சேலை சிக்கி அரவை எந்திரத்துக்குள் அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து க.விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிச்சையம்மாளின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.