சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 2013-ம் ஆண்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபாலன் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீசார் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்ததால் இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதில் பூபாலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து பூபாலனை, திருவெற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். போக்சோ சட்டப்படி நடைபெற்ற இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மற்றும் போலீசாரை துணை கமிஷனர் சிவ பிரசாத், உதவி கமிஷனர் முகம்மது நாசர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.