கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கூறல் மீன்கள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்

கூறல் மீன்கள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போனது.

Update: 2021-09-19 19:00 GMT
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 150&க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம் போல் மீன்பிடித்து விட்டு நேற்று காலை மீனவர்கள் கரை திருப்பினார்கள். அப்போது மீனவர்கள் சிலரின் வலையில் கூறல் மீன்கள் அதிகமாக சிக்கி இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மீனவர்கள் வலையில் கூறல் மீன்கள் சிக்கிய விபரம் வியாபாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் காலையில் இருந்தே கூறல் மீன்களை வாங்க கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் குவிந்தனர். பின்னர் மீனவர்கள் பிடித்துவரப்பட்ட சுமார் 100&க்கும் மேற்பட்ட கூறல் மீன்கள் ஏலம் விடப்பட்டது. வியாபாரிகள் ஏலத்தை போட்டிப்போட்டுக் கொண்டு எடுத்தனர். கடைசியில் இந்த கூறல் மீன்கள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்படி இந்த மீன் ஏன் இவ்வளவு விலை போக காரணம் என்ற கேள்வி எழுப்பலாம். இந்த மீன்னை பொதுவாக உணவுக்காக யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த மீனின் வயிற்றில் ஒரு வகையான குடல் போன்ற உறுப்பு (நெட்டி) காணப்படும், அதனை நெட்டி என்று அழைப்பார்கள். இந்த நெட்டியானது மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பொருள் இருதய அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு தையல் போட பயன்படுத்தப்படும் நூல் இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனாலேயே இந்த மீன்கள் அதிக விலை போகிறது என்று மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்