விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

விவசாயின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2021-09-20 19:01 GMT
குளித்தலை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் என்பவர் தலைமையில், அந்த சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் குளித்தலை அருகே தற்கொலை செய்துகொண்ட விவசாயி வடிவேல் என்பவரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மனு அளிக்க வந்தனர். பின்னர் குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி இடம் தங்கள் மனுவை அவர்கள் அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :& குளித்தலை வட்டம் மேலகுட்டப்பட்டியைச் சேர்ந்த ஏழ்மை விவசாயியான வடிவேல் என்பவர் டிராக்டர் கடன் வாங்கியதற்காக தனியார் வங்கி (எச்.டி.எப்.சி.) ஊழியர்கள் அவருக்கு கடுமையான நெருக்கடி மற்றும் மிரட்டல் விடுத்ததால் கடந்த 11&ந் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார். 
அவருடைய தற்கொலைக்கு அந்த வங்கி ஊழியர்களே முழு காரணம். எனவே அவரை தற்கொலைக்கு தூண்டிய அந்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். டிராக்டர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வடிவேலுவை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வங்கி இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி இதுகுறித்து நாளை மறுநாள் வியாழக்கிழமை வங்கி ஊழியர்களை நேரில் வரவழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்