முந்திரி தொழிற்சாலையில் பா.ம.க. நிர்வாகி மர்ம சாவு

பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் பா.ம.க. நிர்வாகி மர்மமான முறையில் இறந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள், பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-20 21:12 GMT
கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு(வயது 60). பா.ம.க. நிர்வாகியான இவர் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற கோவிந்தராசு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை தேடி வந்தனர். 
இந்த நிலையில் முந்திரி தொழிற்சாலை ஊழியர்கள் நள்ளிரவில் கோவிந்தராசு மகன் செந்தில்வேலை செல்போனில் தொடர்பு கொண்டு, கோவிந்தராசு விஷம் குடித்து விட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது கோவிந்தராசு உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் காடாம்புலியூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை 

இதற்கிடையில் பா.ம.க. மாநில துணை செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து கோ.ஜெகன் மற்றும் நிர்வாகிகள், கோவிந்தராசுவின் உறவினர்கள் ஒன்று திரண்டு காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கோவிந்தராசுவை அடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக முந்திரி தொழிற்சாலை ஊழியர்கள் நாடகமாடுவதாகவும், அதனால் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். 

சாலை மறியல் 

இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது போலீசார், கோவிந்தராசு இறந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பேரில் கோவிந்தராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. பின்னர் இது குறித்து செந்தில்வேல் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மமானமுறையில் இறந்த கோவிந்தராசு பணிபுரிந்து வந்த தொழிற்சாலை கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்